நல்ல நண்பன்
ஒரு பெரிய மருத்துவமனை. அதில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை ஜன்னல் அருகில். இன்னொருவருக்கு ஜன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை, தனிமை, தனிமை..!
ஜன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு முறிவு நோயாளி ஜன்னல் நோயாளியிடம் சொன்னார்...
"உனக்காவது பொழுது போக்க, ஒரு ஜன்னல் இருக்கிறது, எனக்கு அதுகூட இல்லை..!” ஜன்னல் நோயாளி "கவலைப்படாதே நண்பா, நான் ஜன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!
அன்று முதல் ஜன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார். "நண்பா, ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி. நடுவில் சிறு தீவு. ஏரியில் படகுகள் மிதக்கின்றன. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”
எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும். ஜன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..
"ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள். மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”
ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்.
ஒருநாள் ஜன்னல் நோயாளி செத்துப்போனார்..
மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை ஜன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.
இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!
அப்படியானால் ஜன்னல் நோயாளி சொன்ன கதைகள்?
மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார். செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்.
"நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்" என்று.
அன்பு நண்பர்களே.!
சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப் படுத்தி பாக்கறது தான்னு நடிகர் பாக்யராஜ் அடிக்கடி சொல்வார். அது உண்மை தானே..?!
0 Comments
Thank you