HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மனசெல்லாம் மாயா

♥மனசெல்லாம் மாயா ! -
ஜே.செல்லம் ஜெரினா
♥""சாரிடீ... வசு... நான் பிளட் எல்லாம் டொனேட் பண்ண முடியாது!'' மாயாவின் பதில் முகத்திலடித்தாற் போலிருந்தது... "மாயா... மாயாவா பேசினாள்... கண் தானம், ரத்ததானம், உடல் தானம்ன்னு கல்லூரியில் முழங்கிய மாயாவா... இப்படி பேசினாள்... ரத்தம் தர முடியாது... அதிலும் உயிர்த்தோழியின் கணவனுக்கு... தோழனுக்கு...'
♥""மாயா... நீயா... இப்படி பேசுற?'' வசுதாவின் முகத்தில், அதிர்ச்சி அப்பட்டமாக அப்பியிருந்தது...
""ஆமா... ஆமா... வேற விஷயம் இருந்தால் பேசு!''
வசு உறுமினாள்... ""வேற விஷயம் பேசவா... என்னத்தை பேச...? ஷேவாக்குக்கும், தோனிக்கும் நடுவுலே என்னன்னா... இல்ல... சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற போவதேன்னா... கிரண் உனக்கு ப்ரெண்டுன்னா, எனக்கு புருஷன்... அவன் உயிர் ஊசலாடிக் கிடக்குது! நீ... நீ... என்னடி புத்தி கித்தி மாறிப் போச்சா உனக்கு...
""எழுந்து வா மாயா... உன் குரூப்பும், கிரண் குரூப்பும் ஒண்ணுதான்ங்கறது ஞாபகம் வந்ததுமேயே நான் எவ்ளோ நிம்மதியா பீல் பண்ணினேன் தெரியுமா... உன்னைக் கையோட அழைச்சுட்டு போகத்தான் ஓடியாந்தேன்... நீ என்னடான்னா... விளையாடறே... வாடீ...''
கோபத்தில் ஆரம்பித்து, கெஞ்சலில் முடித்தபடி அவள் கையைப் பற்றி இழுத்தாள் வசுதா...
♥""ப்ச்... வசு...! சொன்னா கேக்க மாட்டீயா,'' எரிந்து விழுந்தாள் மாயா!
பற்றிய கைகளை விட்டுவிட்டு, அப்படியே விக்கித்து நின்றாள் வசுதா!
கண்ணுக்குள் நீர் முட்டிக் கொண்டு நின்றது... மிட்டாயை பறி கொடுத்து விட்ட குழந்தை மாதிரி நின்றுக் கொண்டிருந்த வசுதாவைப் பார்த்தபோது, மாயாவுக்கு அடி வயிறு குழைந்தது...
""வசு... அழாதடீ! வேற இடத்துலே போன் பண்ணியிருக்கேன். இந்நேரம் கிளம்பிப் போயிருப்பாங்க... கவலைப்படாதேடீ... கண்டிப்பாக கிரண் பிழைச்சிடுவான்... பாரேன்!''
தோளில் விழுந்த கையைத் தட்டி விட்டாள் வசுதா...
♥""ச்சீ... தொடாதே! நீ ஏன் இப்படி நடந்துக்கறேன்னு எனக்குத் தெரியும் மாயா... எனக்கு எல்லாமே புரியுது...'' சீறினாள் வசுதா.
""என்ன புரியுது?''
""எல்லாமே... உன் கெட்டபுத்தி! உன் பழி வாங்கற புத்தி... எல்லாமே புரியுது...! உன் காதலை கிரண் ஏத்துக்காத வருத்தம், இத்தனை நாளா மனசுக்குள்ளேயே புதைச்சு வச்சு இருந்திருக்கிறே...
""அதான் அவன் மரண விளிம்பிலே நிக்கறப்போ... ரத்தம் சேதமாகி உயிர் போற நேரத்துலே... ஒரே குரூப் ரத்தமானாலும் தர மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறே... நீ மனுஷியா... நீ எங்களுக்கு பிரெண்டா... ச்சீ... ச்சீ...''
♥""ஷட் அப் வசு... மேலே பேசாதே! நீ நம்ம நட்பை மட்டுமல்ல, என் பெண்மையையே களங்கப்படுத்துறே... கிரண்மேல ஏற்பட்டது காதல்னு சொல்ல முடியாது... நல்ல நண்பர், கணவனாக வந்தால் நல்லாருக்குமேன்னு நெனச்சேன்...
""அவனுக்கு உன் மேல தான் காதல்ன்னு தெரிஞ்ச நிமிஷமே, என் மனசை நான் எப்போவோ... நட்புங்கற எல்லையிலேயே நிறுத்தி வச்சுட்டேன்... அசிங்கமா பேசாதே!''
""நானா... நானா... ச்சீ... போடீ போ... நீயும் வேணாம்... உன் நட்பும் வேணாம்! உனக்கு, உன் பிரெண்ட்ஷிப்புக்கே பெரிய கும்பிடு தாயே... ஆளை விடு!''
♥இரு கைகளையும் குவித்து, "விருட்'டென்று வெளியேறினாள் வசுதா... உடல் படபடத்து ஆடியது... நிலைப்படியை பிடித்துக் கொண்டாள். தலை கிறுகிறுத்தது... சமாளித்துக் கொண்டு, காலை செருப்புக்குள் நுழைத்தவளை, உள்ளிருந்து வந்த வினோத சப்தம் தடுத்தது. நகர யத்தனித்து வாயிலைத் தாண்டியவளை, மீண்டும் உள்ளேயிருந்து வந்த அந்த சப்தம், வசுதாவை உள்பக்கமாய் உந்தித் தள்ளியது.
வாஷ் பேசினை பிடித்து, மாயா நின்றிருந்தாள்... இரண்டே எட்டில் அவளை அடைந்த வசுதா, பேசினை பார்த்து, திடுக்கிட்டுப் போனாள்...
♥""அய்யோ... ரத்தம்...'' -மாயா குழாயைத் திறந்து விட்டு வாயையும், முகத்தையும் கழுவிக் கொண்டவள், களைப்புடன் தரையில் சரிந்து உட்கார்ந்தாள்... கண்ணிமைகள் மூடிக் கொண்டன... வசுதா கையை பிசைந்தாள்... ஓடிப் போய் மின் விசிறியை வேகமாக்கினாள்... ப்ரிட்ஜை திறந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்தாள்...
""மாயா... இதைக் குடியேன்... என்னடி பிரச்னை உனக்கு...'' ஆதுரமாய் தோளைத் தொட்டாள்.
கண்ணைத் திறந்த மாயா வெறுமையாய் சிரித்தாள்... ""இந்த கெட்டுப் போன ரத்தத்தைத்தான் கொட்டிக் குடுக்கலைன்னு இத்தனை நேரம் மல்லுக் கட்டிக்கிட்டு இருந்தே...'' விழிகள் மீண்டும் மூடிக் கொண்டன...
♥""சரி... சரி... சாரிடீ... வா, டாக்டர்கிட்டே போகலாம்... எழுந்திரு.''
""பச்... டாக்டர்கிட்ட எல்லாம் போய் வந்தாச்சு... இது கேன்சர்... ப்ளட் கேன்சர். நான் நாட்களை எண்ணிகிட்டு இருக்கேன்.''
நோயின் வேதனையில், உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
""மாயா... இப்பல்லாம் மெடிசின் ரொம்ப அட்வான்ஸ்ட் ஆயிருச்சு... நல்ல ஸ்பெஷலிஸ்ட்டை கன்சல்ட் பண்ணலாம்டீ... ஆமா, நீ ஏன் இதை எங்ககிட்டே சொல்லவேயில்லை...''
♥மாயா வேதனை மீதூர சிரித்தாள்...
""மெடிசன்ஸ் அட்வான்ஸ்ட்டை விட, என்னோட நோய் ரொம்ப அட்வான்ஸ்ட் ஆயிருச்சு வசு... ஊட்டியில் இருந்து வந்ததுமே உன்கிட்டேயும், கிரண்கிட்டேயும் இதெல்லாம் சொல்லணும்ன்னு தான் இருந்தேன்... ஆனா, நீ தாங்க மாட்டேன்னு தோணுச்சு... உன்னைக் கஷ்டப்படுத்த விரும்பலை; உன்னோட அன்புலே மூழ்கி சந்தோஷமா இருந்துட்டு, இருக்கிற கொஞ்ச நாளை கழிக்கலாம்ன்னு தோணுச்சு... வசு அந்த பீரோவுலே ஒரு கவர் இருக்கும் பாரேன்...''
வசுதா ஓடிப் போய் எடுத்து வந்தாள்.
""வசு... நீயும், கிரணும் எனக்கு ஒரு உதவி செய்யணும்!''
♥""சீ... என்னடி பேச்சு இதெல்லாம்?'' என்றவாறே கவரைத் திறந்தவளின் கையில் போட்டோ ஒன்று நழுவியது.
""ஏய்.. இது ஸ்வேதா தானே!'' வசுதா கண் விரிய பார்த்தாள். போட்டோவில் புத்தம் புது மலர் போல சிரித்துக் கொண்டிருந்தது குழந்தை.
""ஆமா, வசு! ஸ்வேதா தான்!'' மாயா ஆசையோடு பார்த்தாள். கூடவே, இன்னொரு போட்டோ... வசுதாவும், மாயாவும் தோளோடு தோள் இணைந்தாள் போல... அடுத்ததாக ஒன்று, கிரணும் வசுதாவும் ஜோடியாக...
""வசு... எனக்கு இந்த நோயைப் பத்தி தெரிய வர்றப்போ, ஸ்வேதாவுக்கு மூன்று வயசு! நான் ரொம்பவும் திணறிப் போயிட்டேன்... எல்லா வழியும் அடைபட்டு போனாப்ல திகைச்சு போயிட்டேன்... நிறைய யோசிச்சேன்... நிறைய முடிவுகளை அவசரமா எடுக்க வேண்டிய இக்கட்டுலே இருந்தேன்...
♥""அவளை ஒரு ரெசிடென்ஷியல் ஸ்கூல்ல சேர்த்தேன்... சுபீரியர் மதர்கிட்டே பேசி, என் ஏற்பாடுகளையும் பேசினேன்... ஸ்வேதாகிட்ட இதே காப்பி இன்னொன்னு இருக்கு... அதுல இருக்கற உன்னைத் தான் அவ அம்மான்னு நெனச்சுகிட்டு இருக்கா... நான் அப்படித்தான் சொல்லி வச்சிருக்கேன்!''
வசுதாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.
""அய்யோ... ஏன்... ஏன்... குழந்தை கிட்டே பொய் சொன்னே மாயா?'' பதறினாள் வசு.
""சுயநலம் தான் வசு... பக்கா சுயநலம் தான் காரணம். என் குழந்தை தாய் தந்தையில்லாத அனாதையாயிடக் கூடாதேங்கற சுயநலம். உன் மேலயும், கிரண்மேலயும் நான் வச்சிருக்கிற நம்பிக்கை. அல்பாயுசுலே போகப் போற இந்த அம்மா இல்லாமல் போறபோது, சொந்த அம்மாவா இல்லாம, வெறும் மாயா அம்மாவா இருந்தா... குழந்தைக்கு அவ்ளோ துக்கம் இருக்காது இல்லையா வசு...
♥""ஸ்வேதா வயிற்றிலிருக்கும் போதே ஸ்வேதாவோட அப்பா ரெண்டே நாள் காய்ச்சலில் திடீர்னு போயிட்டார்... ஸ்வேதா பிறந்த கொஞ்ச நாள்ள, என் அப்பாவும் திடீர்னு மாரடைப்புலே போயிட்டார். எனக்காக ஸ்வேதா; ஸ்வேதாவுக்காக நான் வாழ ஆரம்பிச்ச போது தான், இந்த விஷயம் தெரிஞ்சுது...
""நானும் வாழ்க்கையை எண்ணி எண்ணித் தான் வாழப் போறேன்னு... இடி விழுந்தாப்ல இருந்தது எனக்கு... தாயில்லாத எனக்கு அப்பா இருந்தார் ஆதரவா... ஆனா... ஆனா... என் குழந்தைக்கு... ஏன் இந்த தண்டனை வசு? சொல்லு... சொல்லுடீ!''
மாயாவுக்கு மூச்சு வாங்கியது... கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
""எல்லாத்தையுமே எங்கிட்டே மறைச்சுட்டியே மாயா...'' வசுதா தழுதழுத்தாள்...
♥""மறைக்கணும்ன்னு இல்லே வசு! எனக்கே குழப்பம்... என்ன செய்றதுன்னு புரியலை. உங்ககிட்டே சொன்னா, உங்க பார்வையே மாறிடும்; உங்க அணுகுமுறையே மாறிடும்; பாவமும், அனுதாபமுமாய் அளவு மீறிய கரிசனமுமா என்னை கொன்னுடுவீங்க... இங்க இருந்த இந்த நாட்கள் இயல்பான, அருமையான சந்தோஷத்தை தந்த நாட்கள்...
""அதைக் கெடுத்துக்க எனக்கு மனசு வரலேடீ! ஸ்வேதா பத்தி நான் எடுத்த முடிவுகளைப் பத்தி பேசணும்ன்னு தானிருந்தேன். அதுக்குள்ளார கிரணுக்கு இந்த விபத்து நட... ஹேய்... வசு... கிரணுக்கு தேவையான பிளட் கிடைச்சுருச்சாம்... இதோ பார் மெசெஜ் வந்தாச்சு! நீ ஆஸ்பிடல் கிளம்பு...''
♥""உன்னை இப்படி விட்டுட்டா... நீயும் வா!''
வசுதா குழப்பமும், தவிப்புமாய் ஸ்வேதாவின் போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தாள். குண்டு மல்லிகை கண்களும், ரோஜாப்பூ கன்னங்களுமாய் ஸ்வேதா அழகாக இருந்தாள்.
அதை கவனித்த மாயா, ""வசு... நீயும், கிரணும் ஒரு முக்கியமான வேலையா பாரின் போயிருக்கிறதாகவும், அதுவரை என்னை ஸ்வேதாவுக்கு பொறுப்பாளரா விட்டு இருக்கிறதாகவும், சீக்கிரமே வந்துடுவீங்கன்னு சொல்லி வச்சுருக்கேன்.
""சுபீரியர் மதர் கிட்டே உங்க ரெண்டு பேர் போட்டோவும், என் கைப்பட விரிவாக லெட்டரும் தந்து வச்சுருக்கேன். எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா ஸ்வேதா உன்னிடம் வர தடையேதும் இருக்காது...''
♥""இப்படியெல்லாம் பேசாத மாயா... பீளிஸ். மெதுவா எழுந்துரு... சூடா ஏதாவது கலக்கித்தரேன்... குடி. நீயும் கிளம்பு, மருத்துவமனை போலாம்!''
""ஏதாவது குடு... குடிக்கிறேன்... ஆனா, என்னை பேச விடு... அப்புறம் பேச முடியுமோ, முடியாதோ...''
லேசாக மூச்செறிந்து நிறுத்தினாள் மாயா.
""ஊட்டியிலிருந்த எல்லா சொத்துக்களையும் வித்து பணமாக்கி, ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி இருக்கேன். நீயும், கிரணும் கூட இதில் மெம்பர்கள்... கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அந்த டிரஸ்ட் வேண்டியதை செய்யும்... அதற்கான வழி வகைகளை எல்லாம் என் லாயர் செய்வார்; அவரும் கூட அதில் மெம்பர் தான்...
♥""அப்பா, எனக்குத் தந்த பங்களாவை மட்டும், என் மக பேருக்கு மாத்தி எழுதியிருக்கேன்! என் மகளுக்குன்னு நான் வச்சிட்டு போறது, "மாயா பவனம்' மட்டும் தான். அவளுக்கு நான் தர்ற தாய் வீட்டு சீதனம்! இதுதான் என் மகளுக்கு என்னால செய்ய முடிஞ்சுது...''
குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள் மாயா.
ஸ்வேதா காரிலிருந்து குதித்து இறங்கினாள். ஒரு பெரிய பூவொன்று கை கால் முளைத்து, நடந்து வருவது போலிருந்தது.
♥ஒரு பக்கம், கிரணும், ஒரு பக்கம் வசுதாவும் ஸ்வேதாவின் கையை பிடித்துக் கொள்ள, உள்ளே நுழைந்ததுமே, "சட்'டென்று கண்ணில்பட்டது மாயாவின் அழகான பெரிய புகைப்படம் தான்.
ரோஜாப்பூ மாலையும், ஊதுபத்தி மணமும், ஏற்றி வைத்த சுடருமாய் மாயா அதில் உயிரோட்டமாய் சிரித்தாள்.
""அய்... மாயாம்மா...!'' குழந்தை கை கொட்டி சிரித்தது... மனசெல்லாம் மாயா வியாபித்து நின்றிருந்தாள்... கிரணும், வசுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments